×

அருவிக்கரை தடுப்பணையில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி தாய், தந்தை கண் எதிரே சோகம்

குலசேகரம், மே 7: அருவிக்கரை தடுப்பணையில் மூழ்கி கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தார் பகுதியை சேர்ந்தவர் சிபு வர்க்கீஸ். இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளி நல்லகொண்டாம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலை செய்வதாக தெரிகிறது. இவர் தனது 2 மகன்கள் மற்றும் மனைவியுடன் மாத்தார் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர்கள் நேற்று ஊர் திரும்புவதாக இருந்தது. அதற்கு முன்னர் நேற்று மாலை 4 மணியளவில் திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றின் குறுக்கே உள்ள அருவிக்கரை தடுப்பணைக்கு குடும்பத்துடன் குளிக்கச்சென்றனர்.

அங்கு தடுப்பணையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவரது மகன், கோவையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான சுபின் வர்க்கீஸ் (21), நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்த போதும் முடியவில்லை. இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் தேடி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சுபின் வர்க்கீசை மீட்டனர். திருவட்டார் போலீசார் சம்பவ இடம் சென்று சுபின் வர்க்கீசின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவன் சுபின் வர்க்கீசின் பாட்டியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்துக்காக அவர்கள் ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தந்தை, தாய், சகோதரன் கண் முன்னே மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அருவிக்கரை தடுப்பணையில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி தாய், தந்தை கண் எதிரே சோகம் appeared first on Dinakaran.

Tags : Aruvikarai barrage ,Kulasekaram ,Coimbatore Engineering College ,Sibu Varghese ,Matar ,Tiruvattar ,Kumari district ,Sengampalli Nallakondambalayam, Tirupur district ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!